Full artikkel
பெங்களூருவைச் சேர்ந்தவர் ரேஷ்மா. இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்திருக்கிறார். பின்னர் ரேஷ்மாவும், வெங்கடேஷும் சென்னை அனகாபுத்தூர், சத்யா நகரில் குடியிருந்தனர். அப்போது ரேஷ்மா பாலியல் தொழில் செய்வது தெரிந்ததும், அவரை ஜூன் 24-ம் தேதி கொலைக்க்க்செய்திருக்கிறார். இது தொடர்பாக சங்கர் நகர் போலீஸார் வழக்கு பதிவுசெய்து ரேஷ்மாவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து போலீஸ் கமிஷனர் பிரேமானந்த் சின்ஹா உத்தரவின் பேரில் துணை கமிஷனர் கார்த்திகேயன் ஆலோசனையில் உதவி கமிஷனர் கிரி மேற்பார்வையில் சங்கர் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான தனிப்படை போலீஸ் டீம், வெங்கடேஷை தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் பதுங்கியிருந்த இடம் போலீஸாருக்குத் தெரியவந்ததும், தனிப்படையினர் வெங்கடேஷைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் ரேஷ்மாவை எதற்காக கொலைசெய்தார் என்ற அதிர்ச்சி தகவலை வெங்கடேஷ் கூறியிருக்கிறார். கொலை இது குறித்து நம்மிடம் பேசிய சங்கர் நகர் போலீஸார், ``கைதுசெய்யப்பட்ட வெங்கடேஷ், பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு பெங்களூருவில் டெகரேஷன் செய்யும் வேலை செய்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரேஷ்மாவின் உறவினர் திருமணத்துக்கு டெகரேஷன் செய்யச் சென்ற இடத்தில் ரேஷ்மாவைச் சந்தித்திருக்கிறார். பின்னர் இருவரும் காதலித்து இந்த ஆண்டு ஜனவரி 2-ம் தேதி பெங்களூருவில் திருமணம் செய்திருக்கிறார்கள். அதன் பிறகு சென்னைக்கு வந்து கெருகம்பாக்கம் பகுதியில் குடியிருந்துள்ளனர். அப்போது ரேஷ்மா கர்ப்பமடைந்திருக்கிறார். மேலும் அந்தப் பகுதியில் உள்ள பியூட்டி பார்லரில் ரேஷ்மா வேலை செய்து வந்திருக்கிறார். சென்னையில் வேலை இல்லாததால் வெங்கடேஷ் அடிக்கடி பெங்களூருவுக்குச் சென்று வந்திருக்கிறார். வீட்டில் தனியாக இருந்த ரேஷ்மாவுக்கு, கெருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ரேஷ்மாவின் வீட்டுக்கு அந்த நபர் வருவது தெரிந்ததும், வெங்கடேஷ் மனைவியைக் கண்டித்திருக்கிறார். இந்தச் சூழலில் ரேஷ்மாவைப் பற்றி அக்கம் பக்கத்தினர் தவறாகப் பேசியதையடுத்து, கெருகம்பாக்கம் வீட்டைக் காலி செய்துவிட்டு அனகாபுத்தூருக்கு குடிபெயர்ந்திருக்கிறார்கள். அங்கும் ரேஷ்மாவைப் பார்க்க சிலர் அடிக்கடி வந்திருக்கிறார்கள். அதனால் ரேஷ்மாவின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த வெங்கடேஷ், பியூட்டி பார்லருக்குச் சென்று விசாரித்திருக்கிறார். அப்போது ரேஷ்மா பாலியல் தொழில் செய்து வருவது வெங்கடேஷுக்குத் தெரிந்திருக்கிறது. அதனால் அதிர்ச்சியடைந்த அவர், 'நாம் இருவரும் பெங்களூருவுக்குச் செல்லலாம்' என ரேஷ்மாவிடம் கூறியிருக்கிறார். ஆனால் ரேஷ்மா வர மறுத்திருக்கிறார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஜூன் 24-ம் தேதி அதிகாலையில் ரேஷ்மாவைக் கொலை செய்துவிட்டு, பெங்களூருவுக்குத் தப்பிச் சென்றுவிட்டார். இந்த வழக்கில் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம்'' என்றனர். கைது செய்யப்பட்ட வெங்கடேஷ் வெங்கடேஷிடம் விசாரித்த போலீஸ் உயரதிகாரிகளிடம், மனைவியைக் கொலை செய்ததற்கான காரணத்தைக் கூறி கதறி அழுதிருக்கிறார். இது தொடர்பாக நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரிகள், ``ரேஷ்மாவின் நடத்தையில் சந்தேகம் வந்ததும், அவரைக் கண்காணிக்க வீட்டில் சீக்ரெட் கேமரா ஒன்றைப் பொருத்திவிட்டு வெங்கடேஷ் பெங்களூருவுக்குச் சென்றிருக்கிறார். அந்த கேமராவை தனது செல்போன் மூலம் இணைத்து, வீட்டுக்கு யார் யார் வருகிறார்கள் என்பதைக் கண்காணித்து வந்திருக்கிறார். அப்போது ரேஷ்மாவைச் சந்திக்க சிலர் வந்திருக்கிறார்கள். அவர்களோடு வீட்டில் தங்கியிருந்த பெண்கள் தனிமையில் இருந்திருக்கிறார்கள். அதை செல்போனில் பார்த்த வெங்கடேஷ், உடனடியாக சென்னைக்கு வந்திருக்கிறார். பின்னர், 'நமக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்காக திருந்தி வாழு' என்று ரேஷ்மாவை சமாதானம் செய்திருக்கிறார். அப்போது, 'நீ என்னை டார்ச்சர் செய்தால் இந்தக் குழந்தையைக் கலைத்துவிடுவேன்' என்று ரேஷ்மா மிரட்டியதோடு, வெங்கடேஷை வீட்டைவிட்டு வெளியேறச் சொல்லியிருக்கிறார். அதனால் மனமுடைந்த வெங்கடேஷ், பம்மல் பகுதியில் தங்கியிருந்து மனைவியைக் கண்காணித்திருக்கிறார். இந்தச் சமயத்தில், ஜூன் 23-ம் தேதி அனகாபுத்தூருக்கு பைக் டாக்ஸியில் வந்தபோது, அவரை இறக்கிவிட்ட டிரைவர், இந்த வீட்டிலிருக்கும் பெண்ணை, அரும்பாக்கத்தில் உள்ள லாட்ஜில் பார்த்திருப்பதாக கூறியதோடு செல்போன் செயலி ஒன்றில் இருந்த ரேஷ்மாவின் போட்டோவைக் காண்பித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ், ஜூன் 24-ம் தேதி அதிகாலையில் ரேஷ்மா வீட்டுக்குச் சென்று அவரைக் கொடூரமாகக் குத்திக் கொலை செய்திருக்கிறார். அதைத் தடுக்க வந்த ரேஷ்மாவின் தோழிகள் மீது பெப்பர் ஸ்பிரே அடித்துவிட்டு பெங்களூருவுக்குத் தப்பிச் சென்றிருக்கிறார். பின்னர் ரேஷ்மாவின் தோழிகள் அளித்த தகவலின்படி வெங்கடேஷைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறோம்'' என்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Full artikkel — se lenken under




