புதுடெல்லி, காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான மல்லிகார்ஜுன கார்கே, கடந்த சனிக்கிழமை உத்தரகாண்ட் மாநிலம் ஹல்துவானி பகுதியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அந்த நிகழ்ச்சி நடந்து முடிந்து 2 நாட்களுக்கு பிறகு, கடந்த 10-ந்தேதி, ‘ஸ்ரீ ராம் சேனா’ என்ற வலதுசாரி அமைப்பினர், மல்லிகார்கார்ஜுனா கார்கே பேசிய இடத்தில் யாகம் வளர்த்து ‘சுத்திகாரன்’ எனப்படும் தூய்மைப்படுத்தும் சடங்கை செய்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று, மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “நான் ஹல்துவானி உள்ள ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினேன். அங்கு லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். அப்போது நான் எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்தின் அல்லது மதத்தின் பெயரையும் குறிப்பிடவில்லை. அரசின் செயல்பாடுகள் தொடர்பான பிரச்சினைகளை மட்டுமே சுட்டிக்காட்டினேன். ஆனால் எனது உரைக்குப் பிறகு, அந்த மேடையைச் 'சுத்தம்’ செய்வதற்காக பா.ஜ.க.வினர் அங்கு ஒரு யாகம் நடத்தினர். ஜனநாயகத்தில் இதுதான் நடைமுறையா? இதை நான் ஒரு அரசியல் பிரச்சினையாக மாற்ற விரும்பவில்லை. 'நான் ஒரு தலித், என்னை காப்பாற்றுங்கள்' என்று நான் யாரிடமும் சொன்னதில்லை, யாரிடமும் கெஞ்சியதும் இல்லை. போராடுவதற்கான வலிமை எனக்கு இருக்கிறது, நான் போராடுகிறேன். ஆனால் ஹல்துவானியில் அந்த மேடை ‘சுத்தம்’ செய்யப்பட்ட நிகழ்வு, தீண்டாமையின் கொடுமையை உணர வைத்ததுடன், என்னை அவமானப்படுத்தியது. ஹல்த்வானியில் மேடையை ‘சுத்தம்’ செய்வதாக கூறி யாகம் நடத்தியவர்கள் மீது தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும்; அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்பதே எனது கோரிக்கை.” இவ்வாறு அவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/they-performed-a-yagam-to-purify-the-spot-where-i-stood-and-spoke-mallikarjun-kharge-expresses-anguish




