சென்னை, தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியதும், திமுக கொறடா எ.வ.வேலு பேசுகையில், என்னுடைய சட்டமன்ற அனுபத்தில் எத்தனையோ முதல்-அமைச்சர்களை பார்த்துள்ளேன். அவர்கள் எல்லாரும் கண்ணியமாக தான் பேசினார்கள். நேற்று 26 நிமிடங்கள் அமைதியாக காத்திருந்தோம். ஆனால், நீதிமன்ற விசாரணையில் இருக்கும் வழக்குகள் குறித்து முதல்-அமைச்சர் பேசியிருக்கிறார். பலமுறை இதே மன்றத்தில் பேசப்பட்ட சர்க்காரிய அறிக்கை குறித்தும் அவதூறாக பேசியிருக்கார். முதல்-அமைச்சர் ஆதாரமில்லாமல் பேசி இருக்கிறார். காவல்துறை மானியம் தொடர்பான தகவல் தவிர்த்து, மிசா, மாறன் குறித்து அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், "சர்க்காரியா கமிஷன் வழக்கு குறித்துத்தானே அவையில் பேசினார். கலைஞர் நிதி வாங்கிய விவரங்கள் உள்ளிட்ட அனைத்தும் அந்த அறிக்கையில் உள்ளன. சர்க்காரியா கமிஷன் சுட்டிக்காட்டிய 6 குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் உள்ளது எனக் கூறி சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. மிசாவில் வழிப்பறி வழக்கும் இருக்கும், கொலை வழக்கும் இருக்கும், திருட்டு வழக்கும் இருக்கும், பெண்கள் தொடர்பான வழக்கும் இருக்கும். எல்லாருமே மிசாவில் தான் கைதானார்கள் என்று சொல்ல முடியாது. பிரதமராக இருந்த இந்திரா காந்தியை அவதூறாக பேசியதால் தான் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். இந்திரா காந்தியிடம் 21வது அம்ச திட்டம் ஒன்று உள்ளது என ஸ்டாலின் அவதூறாக பேசினார். அவர் மிசாவில் தான் கைது செய்யப்பட்டார் என்பதற்கு, எந்த ஆதாரமும் இல்லை, எந்த குறிப்பும் இல்லை. என்றார். இதனையடுத்து முதல்-அமைச்சர் பேசிய உரையை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதற்கு சபாநாயகர் முதல்-அமைச்சர் பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் எழுந்து நின்று கோஷம் எழுப்பினர். உடனே தி.மு.க.வினர் சபாநாயகர் இருக்கை முன்பு கீழே அமர்ந்து தர்ணா, கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். தனது இருக்கை முன்பு சூழ்ந்து கொண்டு தொடர்ந்து முழக்கமிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்களை அவை காவலர்களை கொண்டு வெளியேற்ற சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் உத்தரவிட்டார். உடனடியாக உள்ள வந்த அவை காவலர்கள் திமுகவினர் சிலரை குண்டுக்கட்டாக வெளியே தூக்கிச் சென்றனர். உறுப்பினர் ஒருவருக்கு உடல் நிலை சரியில்லை. அவரை அமைதியாக கூட்டி செல்லுங்கள்' என சபாநாயகர் அறிவுறுத்தினார். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. நேற்றைய சட்டசபை நிகழ்விலும் தி.மு.க.வினர் சபாநாயகர் இருக்கை முன்பு கீழே அமர்ந்து தர்ணா, கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/assembly-marshals-forcibly-removed-dmk-members-commotion-in-the-legislative-assembly




