சட்டப்பேரவையில் பேசிய சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா இளைஞர்களை சீர்குலைக்கும் வகையில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட்டதற்கு பதிலாக 50 கோடி ரூபாயை அலங்காநல்லூர் சர்க்கரை ஆலைக்கு வழங்கியிருந்தால் விவசாயிகள் பயன் பெற்றிருப்பார்கள் என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது தொடர்பாக அதிமுகவும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் தான் பேசியது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, " திமுக ஆட்சியில் தடையில் இருந்த ஜல்லிக்கட்டு போட்டியை நான் ஏற்கனவே 2011- 16 ஆம் ஆண்டுகளில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் ஏற்பாடு செய்யப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தியுள்ளேன். எனவே நான் எப்போதும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக இருக்கவே மாட்டேன். நானும் மாடுபிடி வீரர்தான். எனவே இளைஞர்களை எனக்கு எதிராக திருப்பி விட பார்க்கிறார்கள் எம்எல்ஏ கருப்பையா இளைஞர்கள் எப்போதும் முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவாக இருப்பவர்கள். நான் பேசியது ஜல்லிக்கட்டு மைதானத்தை அமைத்து போட்டி நடத்தினால் வெளிநாடுகளைப் போன்று ஒரு மைதானத்திற்குள்ளேயே இளைஞர்களின் திறமையை அடக்குவது போல அமைந்துவிடும் என பேசினேன். ஜல்லிக்கட்டு மைதானம் என்பது கால்நடைத்துறைக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்ட நிலையில் கால்நடை துறையிடம் இதுவரை அந்த இடம் ஒப்படைக்கப்படவில்லை. மைதானத்திற்கு ஒதுக்கிய 50 கோடி ரூபாயை அலங்காநல்லூர் சர்க்கரை ஆலைக்கு ஒதுக்கீடு செய்திருந்தால் பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியானது வெளிப்படை தன்மையுடன் நடைபெறும். எந்த வித குளறுபடியும் இல்லாமல் ஜல்லிக்கட்டு போட்டி பாரம்பர்ய முறைப்படி நடத்தப்படும். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இளைஞர்களின் போராட்டங்களுக்கு பின்பு கிடைத்த ஜல்லிக்கட்டு போட்டி குறித்து நான் எப்படி தவறாக பேசுவேன். எனவே நான் பேசியது குறித்து திரித்து தற்போது பேசப்பட்டு வருகிறது" என தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/i-am-a-jallikattu-tamer-myself-how-could-i-speak-ill-of-jallikattu-mla-karuppiah




