Full artikkel
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மகப்பேறு மருத்துவர் சத்தியசுந்தரி. உள்ளூர் மக்களின் நம்பிக்கைக்குரிய மருத்துவரான இவர், 30 ஆயிரத்திற்ம் மேற்பட்ட பெண்களுக்கு மகப்பேறு மருத்துவம் அளித்தவர். தனது மருத்துவமனைக்கு வரும் பெருவாரியான நோயாளிகள் அனைவரும் ஒரே மாதிரியான குறிப்பிட்ட உடல்நல பாதிப்புகளுடன் வருவதை கவனித்த இவர், மிக மோசமான நச்சுக் கழிவு கலக்கப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்துவதால் இத்தகைய நோய் பாதிப்புகள் மக்களுக்கு ஏற்படுவதைக் கண்டறிந்திருக்கிறார். மேட்டுப்பாளையம் அருகில் உள்ள சிறுமுகை பகுதியில் இயங்கி வந்த 'சவுத் இந்தியன் விஸ்கோஸ்' (South Indian Viscose - SIV) என்கிற தனியார் செயற்கை நூலிழை தயாரிக்கும் தொழிற்சாலையின் சுத்திகரிக்கப்படாத ஆபத்தான வேதிப் பொருட்களை நேரடியாக பவானி ஆற்றில் கலந்து வந்ததே இந்த நோய்களுக்கெல்லாம் காரணம் என்பதை அறிவியல் பூர்வமாகக் கண்டறிந்தவர். சூழலியல் போராளி சத்தியசுந்தரி 1980-களின் இறுதியில் கட்சி பாகுபாடின்றி பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை ஒன்றிணைத்து 'பவானி நதி நீர் பாதுகாப்புக் கூட்டமைப்பு' என்ற சக்திவாய்ந்த மக்கள் இயக்கத்தை உருவாக்கியிருக்கிறார். மருத்துவர் ஜீவானந்தம், தோழர் பி.எல். சுந்தரம், வழக்கறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து வீதியில் இறங்கி போராட்டங்களை நடத்தியது மட்டுமின்றி, நீதிமன்றங்கள் மூலமாகவும் நீண்ட சட்டப் போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார். இவரின் இடைவிடாத போராட்டங்களின் விளைவாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அந்தத் தனியார் தொழிற்சாலை மூடப்பட்டு பவானி ஆற்றில் நச்சுக் கழிவுநீர் கலப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரமாக விளங்கி வரும் பவானி ஆற்றை மீண்டும் தன் இயல்பு நிலைக்கு கொண்டு வந்த சூழலியல் போராளி மருத்துவர் சத்தியசுந்தரி தன்னுடைய 92- வது வயதில் நேற்றிரவு காலமானார். இவரின் சூழலியல் போராட்டத்தை பலரும் நினைவு கூர்ந்து போராடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Full artikkel — se lenken under




