புதுடெல்லி, உலகளவில் கொடிய நோய் பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாக கொசுக்கள் இருக்கின்றன. அளவில் சிறியதாக இருக்கும் இவை உயிருக்கே உலை வைக்கும் தன்மை கொண்டவை. ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் கொசு கடியால் நோய்வாய்ப்பட்டு உயிரிழக்கிறார்கள். குறிப்பாக, டெங்குவால் இந்தியாவில் பலர் பாதிக்கப்படுகின்றனர். டெங்கு பாதிப்பு ஏடீஸ் வகை கொசுக்கள் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு காரணமாக இருக்கின்றன. இது தொற்றுநோய் வகையை சார்ந்தது. இந்த நோய் பாதிப்புக்கு ஆளானவரின் ரத்தத்தை உறிஞ்சும் கொசுக்கள், மற்ற நபர்களை கடிக்கும்போது அவருக்கும் டெங்கு நோய் பாதிப்பு உண்டாகிவிடும். நோய் பாதிப்புக்குள்ளாகுபவர்களுக்கு மூட்டு மற்றும் தசை பகுதியில் கடும் வலி உண்டாகும். இது எலும்பு முறிவு காய்ச்சல் என்றும் அழைக்கப்படுகிறது. வெப்ப மண்டல பகுதியில்தான் இந்த நோய் அதிகமாக பரவும். கொசு கடித்தாலும் 4 முதல் 7 நாட்களுக்கு பிறகுதான் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட தொடங்கும். கடுமையான தலைவலி, கண் வலி, குமட்டல், வாந்தி, மூட்டுவலி, மார்பு, முகம், கை, கால் போன்ற பகுதிகளில் வீக்கம், கடுமையான காய்ச்சல் போன்ற பாதிப்புகள் உண்டாகும். ஆரம்பத்தில் நோய் தாக்கம் லேசாக இருந்து பின் கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும். எனவே, டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. டெங்கு தடுப்பூசி இந்த நிலையில், கடந்த 2022ல் கிழக்காசிய நாடான ஜப்பானை சேர்ந்த உலகின் முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனமான, 'டகேடா பயோபார்மாசூட்டிகல்ஸ்' கண்டுபிடித்த, 'கியூடெங்கா' என்ற தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சர்வதேச அளவில், இந்த தடுப்பூசியை 43 நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. இதுவரை 3.2 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முன், 28,000 பேருக்கு செலுத்தி, 19 கட்ட மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதில் திருப்தி ஏற்பட்ட நிலையில், 'கியூடெங்கா' தடுப்பூசியை உலக அளவில் சந்தைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. மேலும், உலக சுகாதார அமைப்பும் இந்த தடுப்பூசியின் தரம் மற்றும் பாதுகாப்பை அங்கீகரித்து, நோய் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பயன்படுத்தலாம் என அங்கீகரித்துள்ளது. 4 வயது முதல் 60 வயது வரை இந்தியாவில் 4 வயது முதல் 60 வயது வரையிலானவர்களுக்கு இந்த தடுப்பூசியை செலுத்தலாம் எனவும் ஏற்கனவே டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், இல்லாவிட்டாலும் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெங்கு தடுப்பூசியை 0.5 மில்லி லிட்டர் என்ற அளவில் மூன்று மாத இடைவெளியில் இரண்டு டோஸ்களாக தோல் வழியாக செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு இயக்குநரகம் தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/for-the-first-time-in-india-central-government-approves-dengue-vaccine




