நெல்லை, நெல்லை அருகே தொல்லியல் மாணவர்கள் மேற்கொண்ட கள ஆய்வில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. தொல்லியல் மாணவர்கள் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தொல்லியல் துறை மாணவ-மாணவிகள் தொல்லியல் துறை தலைவர் சுதாகர் தலைமையில் நேற்று மருதூர் அணைக்கட்டு, சீவலப்பேரி, மறுகால்தலையில் உள்ள 2,100 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு, உழக்குடி அருகே உள்ள 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நெடுங்கல், நாட்டார்குளம் நடுகல், ஆதிச்சநல்லூர், கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோவில் ஆகிய இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டனர். உழக்குடி அருகே உள்ள நெடுங்கல்லைப் பார்த்த மாணவ, மாணவிகள் அதன் 3 ஆயிரம் ஆண்டுகள் தொன்மையையும் உயரத்தையும் கண்டு வியந்தனர். பானை ஓடுகள் அப்போது அங்குள்ள நெடுங்கல் அருகே மாணவர் லட்சுமணன் என்பவர் பானை ஓடு ஒன்றைக் கண்டெடுத்தார். அதில், ஒரு அந்துப்பூச்சியின் உருவம் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டிருந்தது. வண்ணத்துப்பூச்சிகள் பகலில் சுறுசுறுப்பாகவும், அழகிய பல வண்ண இறக்கைகளுடனும் இருக்கும். ஆனால் அந்துப்பூச்சிகள் பெரும்பாலும் இரவில் செயல்படுபவை. மந்தமான நிற இறக்கைகளையும் உரோமம் போன்ற உடலையும் கொண்டவை. அந்துப்பூச்சிகள் செழிப்பான இடங்களிலேயே காணப்படும். அதேபோல் மாணவி பிரியா என்பவர் அங்கு ஒரு மண்பாண்டத்தின் கலைநுட்பம் மிகுந்த அழகிய பானைமூடியின் உடைந்த துண்டு ஒன்றைக் கண்டெடுத்தார். இவை இரண்டும் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனத் தொல்லியல் உதவிப் பேராசிரியர் மதிவாணன் தெரிவித்தார். இந்த களப்பணியில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சந்திரசேகர் பாராட்டினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/3000-year-old-pottery-shards-discovered-in-nellai




