திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே வீரபத்திரர் கோவில் ஆடி திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே உள்ள எ.சித்தூர் ஊராட்சி வரப்பட்டியில் குரும்ப கவுண்டர் ஆரிய குல பங்காளிகளின் ஸ்ரீ பெருமாள், ஸ்ரீ அஜ்ஜப்பன், ஸ்ரீ வீரபத்திரர், ஸ்ரீ பட்டவன் பாப்பாத்தி, ஸ்ரீ மதுரைவீரன் கோவில்கள் உள்ளன. இக்கோவில்களின் ஆடி மாத திருவிழா விமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று (சனிக்கிழமை) இரவு புனித நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட சுத்தநீர் கோவில் வளாகம் முழுவதும் தெளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கங்கைக்கு சென்று கரகம் அலங்கரித்து மேளதாளம் முழங்க வாண வேடிக்கையுடன் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. மெய்சிலிர்க்க வைத்த வழிபாடு விழாவின் முக்கிய நிகழ்வாக, பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதற்காக, வேண்டிக்கொண்ட பக்தர்கள், ஈர உடையுடன் கோவில் வளாகம் முன்பு வரிசையாக அமர வைக்கப்பட்டனர். செடபட்டி லட்சுமிபுரம் வீரமுஷ்டி குழுவினரின் பாறை முழங்க, பக்தர்களை சுற்றி ஆடி வந்தனர். பின்னர் கோவில் பூசாரி சக்திவேல் அருள் வந்து ஆடிக்கொண்டு பக்தர்களின் தலையில் தேங்காயை உடைத்தார். இந்த காட்சி பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்தது. அதன்பின் ஸ்ரீ மதுரைவீரனுக்கு பொங்கல் வைத்து, கிடா அபிஷேகம் நடைபெற்றது. இறைச்சி சமைக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழாவில் திண்டுக்கல் மாவட்டம் வரப்பட்டி, கம்பளியம்பட்டி, மறவபட்டி, எட்டிகுளத்துப்பட்டி, பெருமாம்பட்டி, குண்டம்பட்டி இ புதூர், நல்லமனார்கோட்டை மற்றும் தேனி மாவட்டம் போடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/devotional/veerabhadrar-temple-aadi-festival-priests-smash-coconuts-on-devotees-heads




