பூரி, உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் ரத யாத்திரை நாளை தொடங்க உள்ளதையொட்டி விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒடிசா மாநிலம் பூரி நகரில் நடைபெறும் ஜெகநாதர் ரத யாத்திரை உலகப்புகழ் பெற்றது. இந்த ரத யாத்திரையைக் காண்பதற்காக நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பூரி நகரில் ஒன்றுகூடுவார்கள். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இந்த வைபவத்தை காண பூரி நகருக்கு அதிக அளவில் வருகை தருவார்கள். அவ்வகையில் இந்த ஆண்டின் ரத யாத்திரையானது நாளை (16.7.2026) தொடங்க உள்ளது. இதற்காக புதிதாக முன்று பிரமாண்ட மரத்தேர்கள் செய்யப்பட்டுள்ளன. கோவிலுக்கு முன்னால் உள்ள பிரதான சாலையில், பலத்த பாதுகாப்புடன் தேர்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ரத யாத்திரை நாளை, பாரம்பரிய முறைப்படி நடத்தப்படும் அனைத்து வழிபாட்டுச் சடங்குகளும் நிறைவடைந்த பிறகு, பூரி மன்னர் கஜபதி மகாராஜா, தங்க துடைப்பத்தால் தேரை சுத்தம் செய்யும் நிகழ்வு, பூரி சங்கராச்சாரியார் சுவாமி நிஷ்சலானந்த சரஸ்வதியின் வருகை ஆகிய பாரம்பரிய நிகழ்வுகளைத் தொடர்ந்து, மாலை 4 மணிக்கு ரதங்கள் புறப்படும். ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து ரதங்களை இழுக்க உள்ளனர். அலங்கரிக்கப்பட்ட தேர்களில் ஜெகநாதர், பாலபத்திரர் (பலராமர்), சுபத்ரா தேவி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தபடி யாத்திரையை தொடங்குவார்கள். தேர்கள் சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள குண்டிச்சா கோவிலை (குந்திச்சா கோவில்) சென்றடைந்ததும் அங்கு ஒரு வார காலம் ஜெகநாதர் ஓய்வெடுப்பார். பின்னர் மீண்டும் தேர்கள் புறப்பட்டு ஜெகநாதர் கோவிலை வந்தடைந்ததும் ரத யாத்திரை நிறைவுபெறும். இந்த திருவிழா 24-ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெறும். ரத யாத்திரையை முன்னிட்டு ஒடிசா நகரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இதனால் பூரி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. விரிவான ஏற்பாடுகள் பிரமாண்டமான இந்த ரத யாத்திரையை சுமூகமாக நடத்தவும், பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும், ஒடிசா அரசாங்கம் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரத யாத்திரையை பக்தர்கள் நேரலையில் காணவும், திருவிழா குறித்த நிகழ்நேரத் தகவல்களைப் பெறவும் ஏதுவாக, பூரி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பில் பல்வேறு இடங்களில் பிரம்மாண்டமான எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. ரத யாத்திரையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு படை மற்றும் அதிவிரைவுப்படை கமாண்டோக்கள், மத்திய ரிசர்வ் போலீஸ் மற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளிட்ட மத்திய ஆயுதப் படைகளின் 15 கம்பெனி வீரர்கள் (1500 வீரர்கள்), மற்றும் 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர கடற்கரையில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, உயிர்காக்கும் 500 வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். காவல்துறையின் ட்ரோன்கள், சதிச்செயல் தடுப்புப் பிரிவு, வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவு மற்றும் மோப்ப நாய் படைகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மழை அச்சுறுத்தல் இதற்கிடையில், வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தப் பகுதி காரணமாக ஒடிசாவின் பூரி நகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. நாளையும் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணித்துள்ளது. இந்த முன்னறிவிப்பைக் கருத்தில் கொண்டு, ரத யாத்திரை தொடங்கக்கூடிய கிராண்ட் சாலையிலிருந்து மழைநீரை வெளியேற்றுவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ரத யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களை அழைத்துச் செல்வதற்காக ஒடிசாவின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் சுமார் 800 சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. ரெயில்வே நிர்வாகம் பூரிக்கு 300-க்கும் மேற்பட்ட ரெயில்களை இயக்கவுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/devotional/puri-ready-for-annual-rath-yatra-odisha-administration-on-high-alert




