சென்னை, நெடுஞ்சாலை துறையில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடு தொடர்பாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும், தனக்கு எதிராக பிறப்பிக்கப் பட்ட லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்யக்கோரியும் எ.வ.வேலு சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தன. விசாரணையின்போது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வக்கீல், விரிவான பதில் அளிக்க கால அவகாசம் கேட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, லஞ்ச ஒழிப்புத்துறை பதில் அளிக்க ஆகஸ்ட் 14-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கினார். எ.வ.வேலு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் வில்சன், எ.வ.வேலு விசாரணைக்கு ஒத்துழைத்து வரும் நிலையில், அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதனை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இதையடுத்து எ.வ.வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது. இருப்பினும், வழக்கு நிலுவையில் உள்ளதால், அவர் வெளிநாடு செல்ல விரும்பினால் கீழமை கோர்ட்டின் அனுமதியை பெற வேண்டும் என்ற நிபந்தனையையும் ஐகோர்ட்டு விதித்துள்ளது. அதே நேரத்தில், எ.வ.வேலுவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்க கூடாது என ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவையும் ஆகஸ்ட் 14-ந்தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/look-out-notice-against-e-v-velu-cancelled-madras-high-court-order




