தனியார் தொலைக்காட்சியை சேர்ந்த பத்திரிகையாளர் விஜயனை திருவல்லிக்கேணி காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று மொபைல் போனை பறிமுதல் செய்து காவல்நிலையத்திலேயே காக்க வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜயன் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றம், 'பத்திரிகையாளர் திரு.விஜயனை விசாரணை என்ற பெயரில் அழைத்து அவருடைய செல்போனை பறிமுதல் செய்துள்ள காவல்துறையின் அராஜக நடவடிக்கை! காவல்துறையின் கருத்துச் சுதந்திர ஒடுக்குமுறை நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது! தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் திரு. இளையராஜா, தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று பேரம் பேசப்பட்டதாக காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் திருநாவுக்கரசு என்பவர் உட்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் புதியதலைமுறை தொலைக்காட்சியில் நெறியாளராக பணியாற்றி வரும் பத்திரிகையாளர் திரு.விஜயன் அவர்கள் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக நேற்று (15.07.2026) நேரில் ஆஜராக வேண்டும் என்று இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக்குழு அவருடைய அலுவலகத்திற்கு சென்று நேரடியாக சம்மன் வழங்கியுள்ளனர். சம்மன் வழங்கிய கையோடு அன்று (15.06.26) இரவே காவல்நிலையத்திற்கு வர வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். காவல்துறையின் அழைப்பின்பேரில் நேற்று இரவு 10 மணியளவில் பத்திரிகையாளர் திரு.விஜயன் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஆஜராகியுள்ளார். அவரிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்திய காவல்துறையினர் நள்ளிரவு 12.30 மணியளவில் விசாரணையை முடித்துள்ளனர். அதன்பிறகு வீட்டிற்குப் புறப்பட்டு சென்ற பத்திரிகையாளர் விஜயனை மீண்டும் காவல்நிலையத்திற்கு வரச்சொல்லியுள்ளனர். விஜயன் நள்ளிரவு 2 மணியளில் விஜயன் மீண்டும் காவல்நிலையத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, காவல்துறையினர் எந்தவித சட்ட விதிகளையும், வழிகாட்டுதல்களையும் பின்பற்றாமல் விஜயன் அவர்களின் செல்போனை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில், இன்று (16.07.26) காலை பத்திரிகையாளர் விஜயன் அவர்களை மீண்டும் விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்தனர். விசாரணைக்காக சென்ற விஜயன் அவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லை. காவல் நிலையத்திலேயே வைக்கப்பட்டுள்ளார். எந்த வழக்காக இருந்தாலும் விசாரணைக்காகவும், சாட்சியம் வழங்கவும் சம்பந்தப்பட்டவர்களை அழைக்க காவல்துறையினருக்கு உரிமை உள்ளது. ஆனால், அதை சட்டத்தின் வழியில், அதன் வரம்பிற்கு உட்பட்டு செய்ய வேண்டும். அதேபோல், விசாரணைக்கு வந்த பத்திரிகையாளரிடம் செல்போனை பறிமுதல் செய்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. காவல்துறையின் இந்த நடவடிக்கை பத்திரிகையாளர்களை மிரட்டி, பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் நடவடிக்கையாகவே சென்னை பத்திரிகையாளர் மன்றம் கருதுகிறது. பத்திரிகையாளர் விஜயனை விசாரணை என்ற பெயரில் உடனடியாக அழைத்துச் சென்றது, வீட்டிற்கு சென்றவரை மீண்டும் அழைத்து எந்தவித விதிகளையும் பின்பற்றாமல் செல்போனை பறித்துள்ளது, மறுநாளும் விசாரணை என்ற பெயரில் காவல்நிலையத்தில் மணிக் கணக்கில் காக்க வைத்திருப்பது போன்ற அராஜக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள காவல்துறையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. பத்திரிகையாளர் விஜயனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள செல்போனை உடனடியாக காவல்துறை திரும்ப ஒப்படைக்கவும், விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளரை அச்சுறுத்துவதை நிறுத்தவும், அவரை உடனடியாக விடுவிக்க காவல்துறையினருககு முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவிட வேண்டும் என்ற சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது' எனக் கூறியிருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/police-summon-and-intimidate-journalist-in-the-name-of-inquiry-chennai-press-club-condemns-the-move




