அதிரசம் சுட்டு வாழ்க்கையை இனிமையாக்கிய செல்லாயி பாட்டியின் கதை! புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள பச்சளூர் கிராமத்தைச் சேர்ந்த 76 வயதான செல்லாயி பாட்டி, இன்றும் தனது உழைப்பால் பலருக்கும் முன்னுதாரணமாக வாழ்ந்து வருகிறார். வயது முதிர்ந்தாலும், தனது கைவினைத் திறமையான அதிரசம் தயாரிக்கும் பணியை அவர் இன்னும் விடாமல் தொடர்ந்து செய்து வருகிறார். செல்லாயி பாட்டியின் கணவர் விவசாயம் செய்து வந்தார். விவசாய வருமானம் மட்டும் குடும்பத்தின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யாத சூழலில், குடும்பத்திற்குத் துணையாக செல்லாயி பாட்டி சிறு தொழிலைத் தொடங்கினார். அவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். தனது பிள்ளைகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஆரம்பத்தில் சுண்டல், வடை போன்ற சிற்றுண்டிகளைத் தயாரித்து விற்பனை செய்தார். பின்னர் குடும்ப விழாக்கள், திருமணங்கள், காதணி விழா, சீமந்தம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக அதிரசம், முறுக்கு, ரவா லட்டு உள்ளிட்ட பாரம்பர்ய இனிப்புகள் மற்றும் பலகாரங்களை ஆர்டரின் அடிப்படையில் தயாரித்து வழங்கத் தொடங்கினார். கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக, தனது கடின உழைப்பை மட்டுமே நம்பி வாழ்க்கையை முன்னெடுத்துள்ளார். 100-க்கும் மேற்பட்ட குடும்ப நிகழ்ச்சிகளுக்குப் பலகாரங்களைத் தயாரித்து வழங்கியுள்ளார். அவரது கைப்பக்குவத்தில் தயாராகும் அதிரசம், இன்று பலரின் விருப்பமான சுவையாக மாறியுள்ளது. இன்று அவரது பேரப்பிள்ளைகள் வெளிநாடுகளில் பணிபுரிந்து வருவதோடு, அவர்கள் நல்ல நிலையை அடைந்துள்ளனர். அவருடைய பேத்தி மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். குடும்பம் நல்ல நிலையில் இருந்தாலும், "உழைத்து வாழ்வதுதான் வாழ்க்கையின் பெருமை சாமி" எனக் கூறும் செல்லாயி பாட்டி, இன்றும் தனது தொழிலை விடாமல் தொடர்ந்து செய்து வருகிறார். "இந்த வயதிலும் ஏன் இன்னும் வேலை செய்கிறீர்கள்?" என்று கேட்டபோது, செல்லாயி பாட்டி கூறிய பதில் வாழ்க்கைக்கே ஒரு பாடமாக இருந்தது. "மனுஷனா பிறந்துட்டா ஏதாவது சாதிக்கணும். கஷ்டப்பட்டுதான் முன்னேற முடியும். இந்த உலகம் ரொம்ப பெரியது. வாழ்க்கையில் கஷ்டமும் தடைகளும் வரும். அதையெல்லாம் எதிர்கொள்ள நம்மை நாமே தயார்படுத்திக்கணும். நான் மன உறுதியோடு இருந்ததால்தான் இன்னைக்கும் வேலை செய்து கொண்டிருக்கிறேன்." இந்த வார்த்தைகள் வெறும் அறிவுரை அல்ல; அவர் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை அனுபவங்களின் சுருக்கம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/features/human-stories/age-is-just-a-number-76-year-old-athirasam-making-grandmothers-story




