ஆட்டத்தின் இறுதி விளிம்பில் விசில் ஊதப்பட்டதும், கண்கள் கலங்க, கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது உலகக் கோப்பை சட்டையில் கடைசி முறையாக மைதானத்தில் நின்றிருந்த ரசிகர்களைப் பார்த்து கைகாட்டினார். திங்களன்று இரவு, டெக்சாஸின் டல்லாஸ் ஸ்டேடியத்தில் நடந்த உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றில், ஸ்பெயினிடம் 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் தோல்வியைத் தழுவியது. அந்த ஒற்றை கோல், ரொனால்டோவின் உலகக் கோப்பை அத்தியாயத்திற்கு ஒரு சோகமான முற்றுப்புள்ளியை வைத்தது. மிகேல் மெரினோ ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் அடித்த அந்த கோல், போர்ச்சுகலின் கனவைச் சிதைத்தது. ஆறு உலகக் கோப்பை தொடர்கள், 27 போட்டிகள், 11 கோல்கள் என நீண்ட ஒரு பயணம், கண்ணீருடன் முடிவுக்கு வந்தது. தனது 41 வயதில், ஆறு வெவ்வேறு உலகக் கோப்பைகளில் கோல் அடித்த ஒரே வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்திருந்தாலும், அந்த ஒரு கோப்பை மட்டும் அவருக்கு எட்டாக்கனியாகவே நின்றுவிட்டது. ரொனால்டோ | Ronaldo "இந்த வழியில் உலகக் கோப்பையிலிருந்து வெளியேறுவது வருத்தமளிக்கிறது," என்று போட்டிக்குப் பிறகு ரொனால்டோ கூறினார். "நான் நேற்று சொன்னது போல, எனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தினேன். என் மனசாட்சி தெளிவாக இருக்கிறது. இதுதான் ஒரு கால்பந்து வீரரின் வாழ்க்கை. நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும்," என்று உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். நிறைவேறாத ஒரு கனவு! ஐந்து முறை பலோன் டி'ஓர் விருதுகள், 2016-ல் யூரோ கோப்பை, இரண்டு UEFA நேஷன்ஸ் லீக் பட்டங்கள் என கால்பந்து உலகில் அவரால் வெல்ல முடியாத கோப்பைகளே இல்லை. ஆனால், ஒவ்வொரு வீரனின் உச்சபட்ச கனவான உலகக் கோப்பை மட்டும் அவரது கைகளுக்கு வரவில்லை. 2006-ல் தனது முதல் உலகக் கோப்பையில் அரையிறுதி வரை சென்றதுதான், அவரது பயணத்தின் உச்சகட்டமாக இருந்தது. "நான் போர்ச்சுகலுக்காக மூன்று பட்டங்களை வென்றுள்ளேன். 2016 யூரோ கோப்பை வெற்றி, உலகக் கோப்பைக்கு நிகரானது," என்று அவர் தனது வருத்தத்தை மறைத்துக்கொண்டார். இதுவே தனது இறுதி உலகக் கோப்பை என்பதை ரொனால்டோ உறுதிப்படுத்தினார். இருப்பினும், சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து உடனடியாக எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. தனது குடும்பத்துடன் ஆலோசித்த பிறகே அதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்றார். போர்ச்சுகல் பயிற்சியாளர் ராபர்டோ மார்டினெஸ், ரொனால்டோவைப் பற்றி பேசுகையில் "நாம் கால்பந்தின் ஒரு சகாப்தத்தைப் பற்றி பேசுகிறோம். கிறிஸ்டியானோ ரொனால்டோக்கள் பலர் இல்லை. இந்த உலகக் கோப்பையில் அவர் செய்த பங்களிப்புக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். அவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரர் மட்டுமல்ல, ஒரு மிகச்சிறந்த மனிதர் என்பதற்கு அவரே உதாரணம்," என்றார். இறுதியாக, ரொனால்டோ தனது உலகக் கோப்பை பயணத்தை 27 போட்டிகளுடன் நிறைவு செய்துள்ளார். இது மெஸ்ஸியின் 30 போட்டிகளுக்கு அடுத்தபடியாக இரண்டாவது அதிகபட்சமாகும். 11 கோல்களுடன், உலகக் கோப்பையில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் தனது பெயரைப் பதித்துள்ளார். அவர் எல்லாவற்றையும் விட உலகக் கோப்பையைத்தான் அதிகமாக விரும்பினார். கால்பந்து அவருக்கு மற்ற எல்லாவற்றையும் கொடுத்தது. ஆனால் டெக்சாஸில் திங்களன்று இரவு, அந்த நிறைவேறாத கனவு விடைபெற்றது. ரொனால்டோ, கலங்கிய கண்களுடன், மைதானத்திலிருந்து வெளியேறும் வரை ரசிகர்களைப் பார்த்து கைதட்டியபடியே சென்றார். மெஸ்ஸி, ரொனால்டோவை முந்திய எம்பாப்பே - நாக்அவுட் சுற்றின் புதிய `சுல்தான்' முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://sports.vikatan.com/football/cristiano-ronaldo-world-cup-dream-ends-portugal-knocked-out




