தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்ற மரியவில்சன், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சராக இருக்கிறார். இவரது உடன்பிறந்த தம்பியான மரிய கிளோத் புதுச்சேரி எழில் நகரில் வசித்து வருகிறார். மரியவில்சனுக்கும், அவரது தம்பிக்கும் சொத்து மற்றும் தொழில் விவகாரத்தில் நீண்ட நாட்களாகப் பிரச்னை இருந்திருக்கிறது. அதனால் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தந்தை நெஸ்தருடன் புதுச்சேரிக்கு வந்த மரியவில்சன், அண்ணன் வீட்டுக்குள் உருட்டுக்கட்டையுடன் நுழைந்து அவர்களைத் தாக்கியிருக்கிறார். அதையடுத்து அமைச்சர் மரியவில்சனின் தம்பி மனைவி கேர்லின் கிளோத், லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், கொலை முயற்சி உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கின் விசாரணை புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அமைச்சர் மரியவில்சன் - அவரது தம்பி மரிய கிளோத் அதன் விசாரணைக்காக அமைச்சர் மரியவில்சன் ஜூன் 16-ம் தேதி ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும், அவர் ஆஜராகவில்லை. அதில் டென்ஷனான நீதிபதி, ``பலமுறை அவர்களுக்கு சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல், திரும்பத் திரும்ப அவகாசம் கேட்பது ஏன்?" என்று கேட்டதுடன், ஜூலை 10-ம் தேதி கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி வழக்கின் விசாரணையை தள்ளி வைத்திருந்தார். அதையடுத்து அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் புதுச்சேரியில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் அமைச்சர் மரியவில்சன். அத்துடன் இந்த விவகாரத்தில் சமரசத் தீர்வுக்கு தயாராக இருப்பதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார் அமைச்சர் மரியவில்சன். அந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முன்பு ஜூலை 9-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அமைச்சர் மரியவில்சனின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றத்தின் சமரசத் தீர்வு மையத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். அதையடுத்து நான்கு முறை சமரசத் தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், கடந்த 17-ம் தேதி நீதிபதி லட்சுமிநாராயணன் முன்னிலையில் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பிலும் சமரசப் பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து வருவதாகவும், அந்த பேச்சுவார்த்தை அடுத்த வாரம் சுமுகத் தீர்வை எட்டிவிடும் என்றும் அமைச்சர் மரியவில்சனின் வழக்கறிஞர் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ``சமரசம் செய்துகொள்ள முடியாத பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை சமரசத் தீர்வு மையத்துக்கு அனுப்ப முடியாது" என்று கூறி வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 19-ம் தேதிக்கு தள்ளி வைத்தார். அதன்படி ஆகஸ்ட் 19-ம் தேதி விசாரணைக்கு வந்த வழக்கில் ஆஜரான அமைச்சர் மரியவில்சனின் சகோதரர், ``சமரசப் பேச்சுவார்த்தைக்கு எங்களுக்கு விருப்பமில்லை" என்றார். அதையடுத்து அமைச்சர் மரியவில்சனின் சமரசத் தீர்வு மையக் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி லட்சுமிநாராயணன், அவரது மற்றொரு கோரிக்கையான புதுச்சேரி நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கை ரத்து செய்யும் மனு மீது விசாரணை நடத்த உத்தரவிட்டார். சென்னை உயர் நீதிமன்றம் தொடர்ந்து, அமைச்சர் மரியவில்சன் தரப்பு சட்டமன்ற நடவடிக்கையைக் காரணம் காட்டியதால், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 28-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டிருந்தார். இதற்கிடையில் மரியவில்சனின் வழக்கை விசாரித்து வந்த புதுச்சேரி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சேரலாதன், அதிரடியாக மாகே பிராந்தியத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று அமைச்சர் மரியவில்சன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை காரணம் காட்டி புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்டார். அதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, ``நீதிமன்றத்துக்கு செல்ல முடியாது என்று கூற அமைச்சர் மரியவில்சன் இங்கிலாந்தின் அரசர் கிடையாது. நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோதே நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கிறார். அமைச்சராவதற்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜரான அமைச்சர் மரியவில்சன், அமைச்சரான பிறகு ஆஜராக மாட்டாரா? நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க முடியாது. அமைச்சர் சட்டத்துக்கு மேலானவர் என்ற தகவலை மக்களிடம் கொண்டு சேர்க்க விரும்பவில்லை. எந்த தேதியில் அமைச்சர் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று இன்றே தெரிவிக்க வேண்டும்" என்று கூறி, விசாரணையை பிற்பகலுக்குத் தள்ளி வைத்தார். `திரும்பத் திரும்ப அவகாசமா?’ - அடிதடி வழக்கில் அமைச்சர் மரியவில்சன் தரப்பிடம் கடுகடுத்த நீதிபதி முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/the-backstory-behind-the-high-courts-dander-statement-in-an-assault-case-over-tn-finance-minister-maria-wilson




