சென்னை, சைபர் குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்பட்டு, அவர்கள் நூதனமான முறையில் கொள்ளையடித்த கோடிக்கணக்கான பணத்தை தங்களது வங்கிக்கணக்கு மூலம் பங்கு போட்ட நூற்றுக்கணக்கான ஏஜெண்டுகளை தமிழகம் முழுவதும் நேற்று போலீசார் கைது செய்தனர். டிஜிட்டல் கைது தற்போது நாடு முழுக்க சைபர் குற்றவாளிகளின் ஆதிக்கம்தான் பொதுமக்களை ஆட்டிப்படைத்து வருகிறது. எங்கோ ஒரு மூலையில் இருந்துகொண்டு, ஆன்லைன் மூலமாக சைபர் குற்றவாளிகள் நூதனமான முறையில் பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்து வருகிறார்கள். 'டிஜிட்டல் கைது' என்ற பெயரில் பொதுமக்களிடம் சைபர் குற்றவாளிகள் கொள்ளை வேட்டையை நடத்தி வருகிறார்கள். இவ்வாறு கொள்ளையில் ஈடுபட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்த 14 சைபர் குற்றவாளிகளை, சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து, அழைத்து வந்து சமீபத்தில் சிறையில் அடைத்தார்கள். வங்கி கணக்கு இவ்வாறு சைபர் குற்றவாளிகள் நூதனமான முறையில் கொள்ளையடிக்கும் கோடிக்கணக்கான பணத்தை, அவர்கள் வங்கிகள் மூலம் தான் பரிமாற்றம் செய்கின்றனர். கொள்ளையடிக்கும் பணத்தை மற்றவர்களின் வங்கிக்கணக்குகளில் போட வைத்து, பின்னர் பங்கு போட்டு கொள்கிறார்கள். கொள்ளையடித்த பணத்தை பங்கு போடுவதற்கு, தமிழகம் முழுவதும் பெரிய அளவில் 'நெட்வொர்க்' அமைத்து, ஏஜெண்டுகளை நியமித்து அவர்களின் வங்கிக்கணக்குகளில் பணத்தை போடவைக்கிறார்கள். பின்னர் அவர்கள் மூலம் பணத்தை பங்கு போடுகிறார்கள் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதற்காக கமிஷன் அடிப்ப டையில், ஏஜெண்டுகள் செயல்பட்டனர். இவர்களை ஒட்டுமொத்தமாக கூண்டோடு கைது செய்ய, மாநில சைபர் கிரைம் போலீசார் நேற்று அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்கள். ஏஜெண்டுகள் கைது தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் இரவில் இருந்து இந்த கைது நடவடிக்கை தொடங்கியது. நூற்றுக்கணக்கான கமிஷன் ஏஜெண் டுகள் கைது செய்யப்பட்டனர். சென்னை நகர சைபர் கிரைம் போலீசாரும், 77 பேரை கைது செய்தனர். அவர்களை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து நேற்று பகலில் விசாரணை மேற்கொண்டனர். நேற்று இரவு வரை இவர்களிடம் விசாரணை நீடித்தது. கைதானவர்களின் உறவினர்கள் ஏராளமான பேர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு திரண்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த கைது நடவடிக்கை சைபர் குற்றவாளிகளுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/agents-who-gave-bank-accounts-to-cyber-criminals-arrests-made-across-tamil-nadu




