இந்தியாவில் தினமும் தோராயமாக 8 கோடி வாகனங்கள் பெட்ரோல் பங்குகளுக்கு எரிபொருள் நிரப்ப செல்கின்றன. இதில் 80 சதவீத வாகனங்கள் பெட்ரோலால் இயங்கும் வாகனங்கள்தான். இந்தியாவுக்கு தேவையான கச்சா எண்ணெயில் 88 சதவீதம் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் அந்நிய செலாவணி அதிகமாக செலவழிக்க வேண்டியுள்ளதால், நிதிப்பற்றாக்குறை அதிகமாக இருக்கிறது. இதற்கு தீர்வு காண்பதற்காக இந்தியாவில் பெட்ரோலுடன் எத்தனால் கலந்து விற்கும் நடைமுறை கடந்த 2013-14-ம் ஆண்டு தொடங்கியது. அப்போது பெட்ரோலுடன் 1.53 சதவீதம் மட்டுமே சோதனை அடிப்படையில் எத்தனால் கலக்கப்பட்டது. அடுத்து 2020-21-ல் 8.1 சதவீதமும், 2021-22-ல் 10 சதவீதமும், 2022-23-ல் 12 சதவீதமும், 2023-24-ல் 14.6 சதவீதமும், 2024-25-ல் 19.2 சதவீதமும், 2025-26-ல் அதாவது கடந்த ஆண்டு நவம்பர் முதல் இந்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் 20 சதவீதமும் பெட்ரோலில் எத்தனால் கலக்கப்பட்டுள்ளது. நமது மண்ணில் விவசாயிகள் வியர்வை சிந்தி உழைத்து பயிரிடும் கரும்பு, சோளம், அரிசி போன்ற விளை பொருட்களில் இருந்துதான் இந்த எத்தனால் தயாரிக்கப்படுகிறது. ஆக பெட்ரோலோடு எத்தனாலை கலந்தால் கச்சா எண்ணெய் மட்டும் மிச்சப்படுவதில்லை. விவசாயிகளுக்கும் கூடுதல் வருமானம் கிடைக்கிறது. இதை ஆதாரப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் சாலைப் போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரியே சொல்லி இருக்கிறார். இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் மிக விரிவாக பதில் அளித்திருக்கிறார். அதில், “எத்தனாலை பெட்ரோலுடன் கலப்பதால் விவசாயிகளுக்கு கூடுதலாக ரூ.1.66 லட்சம் கோடி கிடைத்துள்ளது. இதுவரை அந்நிய செலாவணியை ரூ.1.98 லட்சம் கோடி வரை மிச்சப்படுத்த முடிந்தது. இதுமட்டுமல்லாமல் 3 கோடியே 17 லட்சம் டன் கச்சா எண்ணெய் மிச்சப்படுத்தப்பட்டது. வழக்கமாக பெட்ரோல் வாகனங்களில் இருந்து வெளியாகும் கார்பன் டை ஆக்சைடில் 952 லட்சம் டன் குறைந்து சுற்றுச்சூழலை காப்பாற்றியிருக்கிறது" என்று நிதின் கட்காரி கூறியிருக்கிறார். இதெல்லாம் சரி, மோட்டார் வாகனங்களை வைத்திருப்பவர்களுக்கு என்ன பலன்? என்று கேட்டால் அமெரிக்கா-ஈரான் போர் அதாவது மேற்கு ஆசிய மோதல் காரணமாக உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் வினியோக சங்கிலி பாதிக்கப்பட்டு, அதன் விலை அபரிமிதமாக உயர்ந்தது. எடுத்துக்காட்டாக, நமது அண்டை நாடுகளான பாகிஸ்தானில் பெட்ரோல் விலை 39.77 சதவீதமும், இலங்கையில் 36.66 சதவீதமும். வங்காளதேசத்தில் 42.69 சதவீதமும் உயர்ந்தது. ஆனால் இந்தியாவில் குறைவாக அதாவது 5.58 சதவீதமே பெட்ரோல் விலை உயர்ந்தது. இதை விளக்கமாக நாடாளுமன்றத்தில் கூறிய நிதின் கட்காரி, நம் நாட்டில் மட்டும் பெட்ரோலுடன் எத்தனாலை கலக்காமல் இருந்திருந்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.125 வரை உயர்ந்திருக்கும். ஆனால் நம் நாட்டில் அந்த அளவை எட்டிக்கூட பார்க்கவில்லை. எத்தனாலை கலப்பது இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு, நிலையான விலை, விவசாயிகள் நலன் மற்றும் அந்நிய செலாவணியை மிச்சப்படுத்துவது ஆகியவற்றுக்கு ஒரு சிறந்த முதலீடாக இருக்கிறது என்று கூறினார். இதெல்லாம் நூற்றுக்கு நூறு உண்மைதான் என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை என்றாலும், வாகனங்களின் மைலேஜ் குறைகிறது. பெட்ரோல் டேங்குகள் துருப்பிடிக்கிறது என்ற வாகன ஓட்டிகளின் குறைகளையும் மத்திய அரசாங்கம் கருத்தில் கொள்ளவேண்டும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/others/thalayangam/ethanol-kept-petrol-prices-in-check



