சென்னை, முதல்-அமைச்சரின் அனுமதி பெற்று ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். ஆசிரியர் சங்கங்கள் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் அனைத்து ஆசிரியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர் சங்கங்களின் நிர்வாகிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் நேற்று கலந்துரையாடினார். அப்போது சங்க நிர்வாகிகள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் மாணவர் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்தனர். அப்போது கழிப்பறைகள் சுத்தமாக இல்லாதது, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதற்கு முக்கிய காரணமாக உள்ளது என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதனை கேட்டறிந்த பின்னர் அவர்கள் மத்தியில் அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது:- உலகில் பேசி தீர்க்க முடியாத பிரச்சினைகள் எதுவும் கிடையாது. இருமாநிலங்களுக்கு இடையேயான ஆறுகள் பிரச்சினைகள் ஆனாலும் சரி, நாடுகளுக்கு இடையே ஓடும் ஆறுகளின் பிரச்சினைகளாக இருந்தாலும் சரி தீர்க்க முடியாத பிரச்சினைகள்கூட பேசி தீர்த்து இருக்கிறார்கள். அந்தவகையில் நாமும் பிரச்சினைகளை பேசி அதற்கு தீர்வு காணப்போகிறோம். கோரிக்கைகள்நிறைவேற்றப்படும் எது மக்களுக்கு நல்லது? எது மாணவர்களுக்கு நல்லது? எது பெற்றோருக்கு நல்லது? எது ஆசிரியர்களுக்கு நல்லது? என்பதை மட்டுமே இலக்காக கொண்டு பயணித்து வருகிறது நமது பள்ளிக்கல்வித்துறை. அப்படிப்பட்ட இத்துறையின் ஆணிவேராக இருப்பவர்கள் ஆசிரியர்கள். தமிழக முதல்-அமைச்சரின் அனுமதி பெற்று ஆசிரியர்களின் என்னென்ன கோரிக்கைகளை நிறைவேற்ற முடியுமோ? அவற்றை எல்லாம் நிறைவேற்றுவேன். ஆசிரியர் சமுதாயத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதுதான் எனது ஒரே இலக்கு. இதில் நடிப்புக்கோ, பாசாங்கு செய்வதற்கோ இடமே இல்லை. இவ்வாறு அவர் பேசினார். இதில் பள்ளிக்கல்வித்துறை கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் பி.சந்திர மோகன், பள்ளிக்கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பன், தொடக்கக்கல்வி இயக்குனர் நரேஷ், அரசு தேர்வுகள் இயக்குனர் சசிகலா உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். கோரிக்கைகள் என்னென்ன. முன்னதாக அமைச்சருடனான கலந்துரையாடலில் பங்கேற்ற ஆசிரியர் சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அதில் சில கோரிக்கைகள் வருமாறு:- பழைய ஓய்வூதியத்திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும், பணியில் இருக்கும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வு தேவையில்லை என சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும், ஆசிரியர்களை கற்பித்தல் பணிகளை தவிர பிற பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது,எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேரத்தை 2.30 மணி நேரமாக மாற்ற வேண்டும், 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான அனைவருக்கும் தனியார் பள்ளிகளை போல் நேர்த்தியான வண்ண உடைகளும், ஷூவும் வழங்க வேண்டும், தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் மழலையர் கல்வி வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/this-is-the-reason-for-the-drop-in-student-enrollment-in-government-schools-headmasters-stun-the-minister




