சென்னை, தவெக பெண் தொண்டர்களை இழிவாகப் ஏசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. தவெக தலைவர் விஜய்-க்கு ஆதரவாக பேட்டியளித்த பெண் தொண்டர்களை இழிவாக விமர்சித்ததாக, அரசியல் விமர்சகரும், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆலோசகருமான பொன்ராஜ்-க்கு எதிராக, கடந்த மார்ச் 26ஆம் தேதி தற்போதைய அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜ்குமார் ஆகியோர் அளித்த புகார்களின் அடிப்படையில், மே 12ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரும், கடலூர் போலீசாரும் வழக்குகள் பதிவு செய்திருந்தனர். இந்த இரு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி பொன்ராஜ் தாக்கல் செய்திருந்த மனுக்களை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்தார். பொன்ராஜ் தரப்பில், யு டியூப் சேனல் பேட்டியில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மட்டுமே மனுதாரர் பதிலளித்தார். மற்றபடி பெண்களுக்கு எதிராக உள்நோக்கத்துடன் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. தற்போது அமைச்சர்களாக உள்ள இருவர், தேர்தலுக்கு முன் அளித்த புகார்கள் மீது புதிய அரசு பொறுப்பேற்ற பின், எந்தவித ஆரம்பகட்ட விசாரணையும் நடத்தாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என வாதிடப்பட்டது. காவல் துறை தரப்பில், மறைந்த முன்னாள் ஜனாதிபதியின் தனி செயலாளராக பணியாற்றியவர், இதுபோல பேசியிருக்க கூடாது. அவரது பேச்சு ஒட்டுமொத்த பெண்களை குறிக்கும் வகையில் பொதுப்படையாகவே உள்ளது. மனுதாரரின் பேச்சு அடங்கிய வீடியோக்கள், இன்னும் இணையதளத்தில் உள்ளன. வழக்கு முதல் தகவல் அறிக்கை என்ற நிலையில் மட்டுமே உள்ளதால், வழக்கை ரத்து செய்யக் கூடாது என வாதம் முன் வைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பொன்ராஜின் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார். இந்தநிலையில், இன்று, இந்த மனுக்கள் மீது தீர்ப்பளித்த நீதிபதி, பொன்ராஜ் தரப்பு வாதங்களை ஏற்க மறுத்து, அவரது மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/case-of-derogatory-remarks-against-female-thaweka-volunteers-ponrajs-petition-dismissed




