சென்னை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- மாநிலங்களவையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசின் நீர்வளத்துறை இணை மந்திரி ஸ்ரீ ராஜ் பூஷன் சவுத்ரி அளித்துள்ள பதில் தமிழ்நாட்டிற்கு பாதகம் விளைவிக்குமோ என்ற ஐயம் எழுந்துள்ளது. “காவிரி பிரச்சினை தொடர்பாக சுப்ரீம் கோர்ட் கடந்த 2018 பிப் 16 -ம் தேதி அளித்த தீர்ப்பில், காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டுமானத்தையும் கட்ட தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதலை கர்நாடகா பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை." “நடுவர் மன்ற தீர்ப்பின் ஒரு பகுதியாக, காவிரி நீரை அந்தந்த மாநிலத்தில் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் உள்ளிட்ட தங்களது தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளவும், பலனை அனுபவிக்கவும், திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளவும் எந்த கட்டுப்பாடும் இல்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது." மத்திய நீர்வளத்துறை இணை மந்திரி இவ்வாறு மத்திய நீர்வளத்துறை இணை மந்திரி கூறியிருப்பது கர்நாடக மாநிலம் மேகதாது அணை கட்டுவதற்கு வழங்கப்படும் அனுமதிக்கான சமிக்ஞை போன்று தெரிகிறது. 2018 பிப்ரவரி 16 -ம் நாள் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பு, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை உறுதி செய்வதாகவே இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மிகத் தெளிவானது. "இந்தத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு முரணாக இல்லாத வகையில், ஒவ்வொரு மாநிலமும் தனது எல்லைக்குள் நீரின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தவும், அந்த மாநிலத்திற்குள் உள்ள நீரின் பயனை அனுபவிக்கவும் உள்ள அதிகாரம் பாதிக்கப்படாது. காவிரி நீர் "மேல்பகுதி மாநிலம், கீழ்ப்பகுதி மாநிலங்களுக்கு அட்டவணைப்படி வழங்க வேண்டிய நீர்வரத்தை பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது." கீழ்பகுதி மாநிலம், அதாவது தமிழ்நாடு பெற்று வரும் காவிரி நீர் வரத்தை தடுக்கும் வகையில் மேல்பகுதி மாநிலமான கர்நாடகம் தடுப்பணைகளை அமைக்க கூடாது என்பதுதான் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் சாரம்சமாகும். கர்நாடக மாநிலத்தின் எந்த நடவடிக்கையும் சுப்ரீம் கோர்ட் உறுதி செய்த காவிரி நீர்ப் பங்கீடு மற்றும் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிர்ணயிக்கப்பட்ட நீர்வரத்தை பாதிக்கக் கூடாது என்பதே தீர்ப்பின் முக்கியக் கோட்பாடாகும். காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பு, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு ஆகியவற்றை நீர்த்துப்போக செய்து, கர்நாடக மாநிலம், மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய பாஜக அரசு வஞ்சகமான முறையில் அனுமதி வழங்க முனைந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும். கர்நாடக அரசுடன் நேரடி பேச்சுவார்த்தை தமிழ்நாடு அரசு இதில் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். மேகதாது அணை குறித்து கர்நாடக அரசுடன் நேரடி பேச்சுவார்த்தை என்பதே கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். சர்வதேச நீர் பங்கீடு சட்டங்களின் படியும், இயற்கை நீதியின் படியும் உரிமை உள்ள கீழ்பகுதி மாநிலமான தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையைத் தட்டிப் பறிப்பதற்கு மத்திய அரசின் துணையுடன் கர்நாடக மாநிலம் முயற்சிப்பதை முறியடிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/central-bjp-governments-attempt-to-snatch-away-tamil-nadus-cauvery-water-rights-vaiko-condemns




