திருமலை, திருப்பதியில் இன்று காத்திருப்பு அறைகள் முழுவதும் பக்தர்கள் நிரம்பியிருப்பதால், 'டைம் ஸ்லாட்' டோக்கன்கள் இல்லாமல் சர்வதரிசனத்திற்கு சுமார் 20 முதல் 24 மணி நேரம் ஆகலாம். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் சராசரியாக 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள். காத்திருப்பு அறைகளில் பெரும்பாலான அறைகள் நிரம்பிவிடுகின்றன. சில நாட்களில் அறைகள் முழுவதும் நிரம்பி சிலாதோரணம் வரை பக்தர்களின் வரிசை நீண்டிருக்கும். நேரம் குறிப்பிடப்பட்ட டோக்கன் பெறாமல் நேரடியாக இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள், பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். நேற்று 68 ஆயிரத்து 374 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 35 ஆயிரத்து 241 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக 4.03 கோடி ரூபாய் செலுத்தி உள்ளனர். 4.19 லட்டுகள் விற்பனை ஆகி உள்ளன. 2.82 லட்சம் பக்தர்கள் அன்னபிரசாதம் பெற்றுள்ளனர். இன்று காலை நிலவரப்படி திருப்பதியில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள காத்திருப்பு அறைகள் நிரம்பி, சிலாதோரணம் பகுதி வரை பக்தர்களின் வரிசை நீண்டிருந்தது. இதனால் 'டைம் ஸ்லாட்' டோக்கன்கள் இல்லாமல் நேரடியாக சர்வதரிசனத்திற்கு சென்றுள்ள பக்தர்கள், ஏழுமலையானை தரிசனம் செய்ய தோராயமாக 20 மணி முதல் 24 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'டைம் ஸ்லாட்' டோக்கன்கள் உள்ளவர்கள் 4 முதல் 6 மணி நேரத்திற்குள் தரிசனம் செய்ய முடியும். 300 ரூபாய் தரிசன டிக்கெட் பெற்றவர்கள் 3 மணி முதல் 4 மணி நேரம் காத்திருக்கவேண்டியிருக்கும். ஸ்ரீவாணி விஐபி தரிசன டிக்கெட் உள்ளவர்கள், 1 மணி நேரத்திலும், ஆர்ஜித சேவை டிக்கெட் உள்ளவர்கள், கைக்குழந்தைகளுடன் வந்திருக்கும் பக்தர்கள், நன்கொடையாளர்கள் ஆகியோர் 1 மணி முதல் 3 மணி நேரத்திற்குள் தரிசனம் செய்து திரும்பலாம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/devotional/at-tirumala-sarvadarshanam-without-ssd-tokens-takes-approximately-20-24-hours




