பெங்களூர், தமிழக முதல் அமைச்சர் விஜய் கர்நாடக செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், விஜய் வந்தால் பெங்களூரு விமான நிலையத்தை முற்றுகையிடுவோம் என்று கன்னட சாலுவாலி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக அமைப்புகள் இன்று ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வாட்டாள் நாகராஜ் கூறியதாவது; பெங்களூருவுக்கு தமிழக முதல்-அமைச்சர் விஜய் வந்தால், விமான நிலையதை முற்றுகையிடுவோம். தமிழகத்திற்கு தண்ணீர் வேண்டாம் என்று அவர் கூறினால் வரவேற்போம். தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்குவதை கண்டித்து ஆகஸ்டு 13-ந் தேதி கர்நாடகாவில் பந்த் நடைபெற இருக்கிறது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த முழு அடைப்பு போராட்டம் நடைபெறும்” என்றார். கர்நாடகா செல்லும் விஜய்? கர்நாடகம்-தமிழகம் இடையே காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக நீண்டகாலமாக பிரச்சினை நீடித்து வருகிறது. குறிப்பாக மழை பொய்த்து போகும் காலங்களில் இந்த பிரச்சினை தலை தூக்கி வருகிறது. நடப்பாண்டும் கர்நாடகத்தில் போதிய மழை பெய்யாததால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்குவதில் பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது.இதற்கிடையே காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டவும் கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடும் எதிர்ப்பு இந்த பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என முதல்-அமைச்சர் விஜய் கருதுகிறார். எனவே அவர் காவிரி நதி நீர் விவகாரம், மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரை சந்தித்து பேச முடிவு செய்து கடிதம் அனுப்பியுள்ளார். இதற்காக முதல்-அமைச்சர் விஜய் வருகிற 3-ந்தேதி (திங்கட்கிழமை) பெங்களூருவுக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் கர்நாடகா செல்ல தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. முதல் அமைச்சர் விஜய் கர்நாடகா செல்வது தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றும் அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் இன்று கூறியிருந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/we-will-lay-siege-to-the-bengaluru-airport-if-vijay-arrives-vatal-nagaraj-warns




