மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்துள்ள நிலையில், அவரை தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் நேரில் சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. கோவளத்தில் இன்று நடைபெறும் 31-வது தென் மண்டலக் குழு கூட்டத்துக்கு முன்னதாக, இரு தலைவர்களும் சந்தித்துக் கொண்டனர். இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமானது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், அதன் அரசியல் முக்கியத்துவம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. விஜய் எடுத்த முடிவு‘நானே வரவேற்கிறேன்’ தென் மண்டலக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமித் ஷா நேற்று இரவு சென்னை வந்தார். விமான நிலையத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் பாஜக நிர்வாகிகள் அவரை வரவேற்றனர். பின்னர் அவர் கோவளம் சென்றார். இந்த நிலையில், கூட்டத்துக்கு முன்னதாக முதலமைச்சர் விஜய், அமித் ஷாவை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு அமித் ஷாவுடன் விஜய் மேற்கொண்ட முதல் சந்திப்பு இது என்பதும் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. வழக்கமான அரசு முறைப்படி மூத்த அமைச்சர்கள் அல்லது அதிகாரிகள் மூலம் வரவேற்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல்வரே நேரில் சென்று மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்திருப்பது அரசியல் ரீதியாகவும் விவாதப் பொருளாகியுள்ளது. `அமித் ஷாவை வரவேற்க நானே செல்கிறேன்' என முதல்வரே அந்த முடிவை எடுத்ததாகவும் சொல்கிறார்கள் கோட்டை வட்டாரத்தினர். அமித் ஷா - விஜய் மத்திய அரசுடன் ‘நிர்வாக இணக்கம்’… அடுத்தடுத்த நகர்வுகள்? மத்திய அரசுடன் நிர்வாக ரீதியாக இணக்கமாகச் செயல்படத் தயாராக இருப்பதாக முதலமைச்சர் விஜய் அண்மையில் சுதந்திர தின உரையில் கூட தெரிவித்திருந்த நிலையில், அமித் ஷாவுடனான இந்த நேரடி சந்திப்பு கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மாநில உரிமைகள், மத்திய அரசுடனான உறவு, நிதிப் பகிர்வு உள்ளிட்ட விவகாரங்களில் அரசியல் ரீதியாக வேறுபாடுகள் இருந்தாலும், நிர்வாக ரீதியாக மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டிய சூழல் இருப்பதை விஜய் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அந்த அணுகுமுறையின் தொடர்ச்சியாகவே இந்தச் சந்திப்பைப் பார்க்க வேண்டுமா என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. அமித் ஷா தலைமையில் தென் மண்டலக் குழு கூட்டம் இதற்கிடையே, சென்னை அருகே கோவளத்தில் இன்று 31-வது தென் மண்டலக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தென் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலங்களும், புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களும் தென் மண்டலக் குழுவில் இடம்பெற்றுள்ளன. மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது, மத்திய–மாநில ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது மற்றும் பிராந்திய வளர்ச்சியை ஒருங்கிணைப்பது ஆகியவை இந்தக் குழுவின் முக்கிய நோக்கங்களாக உள்ளன. இந்த நிலையில், கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே அமித் ஷாவை முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. அரசியல் மேடையில் மத்திய அரசை எதிர்கொள்வதும், நிர்வாக ரீதியாக மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவதும் – இந்த இரண்டுக்கும் இடையிலான சமநிலையை விஜய் எவ்வாறு கையாளப் போகிறார் என்பதற்கான தொடக்கப் புள்ளியாக இந்தச் சந்திப்பு பார்க்கப்படுமா? என்பதே தற்போது அரசியல் வட்டாரத்தில் எழும் முக்கியக் கேள்வியாக உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/cm-vijay-decided-to-welcome-union-minister-amit-shah




