சென்னை, டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பட்டது. கடந்த திமுக ஆட்சி காலத்தில் டாஸ்மாக் டெண்டர் மதுபான கொள்முதல் உள்ளிட்ட பணிகளில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்திருந்தது. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் புதிதாக வழக்கு ஒன்றை பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். இந்த வழக்கின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, அவருக்கு தொடர்புடைய இடங்கள், டாஸ்மாக் அதிகாரிகளில் இடங்கள், மதுபான ஆலைகள் உள்ளிட்ட 41 இடங்களில் தமிழ்நாடு முழுவதும் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் டாஸ்மாக் டெண்டர், மதுபான கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் முறைகேடு நடந்ததற்கான முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. மேலும், சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியார் விடுதியில் தங்கியிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் சுமார் 3 மணி நேரம் தீவிர விசாரணை மேற்கொண்டு, அவரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து, டாஸ்மாக் நிறுவனத்தில் பார் உரிமம் வழங்குதல், போக்குவரத்து ஒப்பந்தங்கள், மதுபான கொள்முதல் மற்றும் விற்பனை உள்ளிட்டவற்றில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறப்படும் புகாரில், செந்தில் பாலாஜி, முன்னாள் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகன், முன்னாள் முதுநிலை மண்டல மேலாளர்கள் ராமதுரை முருகன், பன்னீர்செல்வம், செந்தில் பாலாஜியின் முன்னாள் தனி உதவியாளர் பாஸ்கர், செந்தில் பாலாஜியின் நெருங்கிய கூட்டாளிகள் என குறிப்பிடப்பட்டுள்ள ரத்தீஷ்ராஜ், சண்முகவேல், கார்த்திக் ஆகிய ஏழு பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தநிலையில், டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. மதுபான கொள்முதல் மற்றும் பார் டெண்டர் முறைகேடு தொடர்பாக, இன்று காலை 11 மணிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-corruption-case-anti-corruption-department-summons-senthil-balaji




