சென்னை, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மத்திய மந்திரி அமித்ஷா தலைமையில் 31-வது தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு சென்னை மாமல்லபுரத்தை அடுத்துள்ள கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் இன்று தமிழகத்திற்கு வருகை தந்தார். இதையடுத்து, மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு சென்று டி.கே.சிவக்குமார் மரியாதை செலுத்தினார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- “இன்று 'சத்பாவனா திவாஸ்' (நல்லிணக்க நாள்) அன்று, தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு சென்று, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்தினேன். இங்கு வந்தது எனக்கு நெகிழ்ச்சியான உணர்வை அளித்தது. எனது அரசியல் பயணத்தின் ஆரம்பக் கட்டத்தில் அவர் என் மீது கொண்டிருந்த நம்பிக்கையையும், அன்பையும் நினைவுகூரச் செய்தது. இளம் தலைவர்கள் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கைதான், மக்களுக்கும், நாட்டிற்கும் சேவை செய்ய முன்வருவதற்கான துணிச்சலை என்னைப் போன்ற பலருக்கும் அளித்தது. இந்த நினைவிடம் எனக்கும் கர்நாடக மக்களுக்கும் இடையே ஒரு சிறப்பான பிணைப்பைக் கொண்டுள்ளது. கர்நாடகத்துடனான அவரது பிணைப்பின் நீடித்த அடையாளமாக, கனகபுராவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒற்றைக் கல் கிரானைட் பாறையில் அவரது உருவம் பதிக்கப்பட்டு இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதனை சாத்தியமாக்குவதில் முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் அளித்த ஆதரவை நான் நன்றியுடன் நினைவுகூர்கிறேன். ராஜீவ் காந்தியின் கொள்கைகளும், தொலைநோக்குப் பார்வையும் தொடர்ந்து எனக்கு வழிகாட்டுகின்றன. மக்களுக்கும், நாட்டிற்கும் அர்ப்பணிப்புடன் சேவை செய்வதன் மூலம் அவரது லட்சியங்களை முன்னெடுத்துச் செல்ல நான் உறுதியுடன் உள்ளேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/dk-shivakumar-pays-tribute-at-the-rajiv-gandhi-memorial-in-sriperumbudur




