திண்டுக்கல் மாவட்டம் மரியநாதபுரம் கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமம் புறம்போக்கு நிலத்தில் இருப்பதாகவும், அதனால் இங்கிருப்பர்கள் வெளியேற வேண்டும் என அரசு தரப்பில் கிராம மக்களுக்கு நோட்டீஸ் தரப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் 'நாங்கள் வெளியேற மாட்டோம், இங்கேயே எங்களை குடியமர்த்த வேண்டும்' என போராட்டங்களை செய்து வருகிறார்கள். அதிலும் மேற்கு தொடர்ச்சி மலை படத்தில் நடித்த ஆண்டனி என்பவருடைய சொந்த ஊர் என்பதால் அவரும் மக்களோடு மக்களாக போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார். இது குறித்து நடிகரும் மரியநாதபுரத்தை சேர்ந்தவருமான ஆண்டணி பேசுகையில், " பாலகிருஷ்ணாபுரத்திற்கு பக்கத்தில் இருக்கிற மேற்கு மரியநாதபுரத்தில் 40 வருடங்களாக வசித்து வருகிறோம். நான் படித்தது வாழ்ந்தது எல்லாம் இங்கு தான். இந்த ஊரில் இருந்து தான் பை எடுத்து கொண்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி சென்னைக்கு சென்றேன். நாங்கள் இருக்கும் இடம் நீர்நிலை பகுதி இங்கிருந்து காலி செய்யுங்கள் வேறு இடம் தருகிறோம் என அரசு தரப்பில் சொல்கிறார்கள். அது எப்படி எங்களுக்கு மாற்றாகும். எங்களுடைய முன்னோர்கள் இங்கிருக்கிற கல்லறைகளில் தான் அடக்கம் செய்திருக்கிறோம். இப்போது எங்களை எங்கோ ஒரு இடத்தில் குடியமர்த்தினால் எங்களுடைய முன்னோர்களுடனான தொடர்பும், மரபும் அற்று போய்விடும். மரியநாதபுரம் மக்கள் அதோடு இங்கிருக்கிற மக்கள் எல்லோரும் சாதிய பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு இங்கு வந்து குடியேறியவர்கள். இங்கு பக்கத்தில் இருக்கும் கடையில் ஒரு பொருள் வாங்க சென்றாலே இந்த ஊர்மக்களுக்கு அதிக விலையும் மற்றவர்களுக்கு குறைவான விலையும் சொல்கிறார்கள். இந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில் இவர்களை வேறு இடத்திற்கு மாற்றினால் இன்னமும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். மேற்கு தொடர்ச்சி மலை படத்தில் நான் நடிக்கும் போது தன்னுடைய சொந்த நிலத்திலேயே வாட்ச்மேனாக அமர்ந்திருக்கும் காட்சி வரும். அப்படியான ஒரு விஷயம் தான் இதுவும். இந்த ஊரில் வாழ்வதே ஒரு சவலான விஷயம் தான். போதிய அடிப்படை வசதிகள் இல்லை ஆனாலும் வாழ்ந்து பழகி கொண்டோம். இப்போது வேறு இடத்தில் எங்களை குடியமர்த்தினால், அரசு கொடுக்கிற இடத்திற்கு சென்றால் அங்கு எப்படி இருக்கும் என தெரியாது. இந்த ஊரில் நிறைய பேர் 60 வயதை கடந்தவர்கள் அவர்களுக்கு நிறைய உடல் பிரச்சனைகளும் இருக்கிறது. புது இடத்திற்கு மாற்றினால் அவர்களால் இருக்க முடியுமா என தெரியாது. நாங்கள் வசிக்கும் பகுதி நீர்நிலை புறம்போக்கு இல்லை. அதிகாரிகள் ஆய்வு செய்தால் உண்மை தெரியவரும். நாங்கள் வாழ்ந்த இந்த இடத்தை எங்களுக்கே கொடுத்து விடுங்கள்" என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/they-are-trying-to-displace-our-village-just-like-in-the-movie-western-ghats-actor-antony-stages-a-protest




