வேலூர் மாவட்டம், காட்பாடி ரயில் நிலையம் அருகே கடந்த 13-ம் தேதி சந்தேகத்திற்கிடமாக சிக்கிய இருவரிடம் வேலூர் மதுவிலக்குப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தியதில், அவர்களிடமிருந்து 14 கிலோ கஞ்சா சிக்கியது. விசாரணையில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இப்ராஹிம் ( 23), நூகுல் ஷாஹிம் (20) எனத் தெரியவந்தது. ஒடிசா மாநிலத்திலுள்ள மோகனா பகுதியில் வசிக்கும் ரிங்கு லீமா என்பவனிடமிருந்து கஞ்சா வாங்கி வந்ததாக இருவரும் தெரிவித்தனர். அவன் மூலமாக தமிழகத்தில் கஞ்சா புழக்கம் இருப்பதும், இங்குள்ள கஞ்சா வியாபாரிகள் பலரும் அவனுடன் தொடர்பில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, பிடிபட்ட இருவரையும் கைது செய்து நீதிமன்றக் காவலில் போலீஸார் சிறையிலடைத்தனர். கஞ்சா வியாபாரி ரிங்கு லீமா (பின்னாலிருப்பது போலீஸார்) இந்த நிலையில், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளர் கார்த்திக் செல்வம் தலைமையில் தலைமைக் காவலர்கள் கோபிநாத், பிரபு மற்றும் காவலர் பவுல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் ரிங்கு லீமாவை அடையாளம் கண்டு பிடிக்க ஒடிசா விரைந்தனர். ஒடிசாவில் தங்கியிருந்து 4 நாள்கள் பல்வேறு இடங்களுக்கும் பயணித்து, ரிங்கு லீமா பதுங்கியிருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். அதாவது, ஒடிசாவில் கஜபதி என்ற மாவட்டம் உள்ளது. இது ஒரு மலைப்பாங்கான மாவட்டமாகும். அந்த மாவட்டத்தில் கேசரிகுடா என்ற இடத்தில் பதுங்கியிருந்த ரிங்கு லீமாவைக் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவனுக்கு 19 வயதுதான் ஆகிறது. அதற்குள்ளாக கஞ்சா நெட்வொர்க் கும்பலுடன் மிக நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, ரிங்கு லீமாவை வேலூருக்கு அழைத்து வந்த போலீஸார் விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையிலடைத்திருக்கின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/crime/ganja-network-vellore-police-travel-all-the-way-to-odisha-and-arrest-a-key-cannabis-dealer




