சென்னை, பாரம்பரியமாக வனம் சார்ந்து வாழும் மக்களின் வாழ்வுரிமை, வாழ்வாதார உரிமை மற்றும் சட்டப்பூர்வ வன உரிமைகளைப் பாதுகாப்பதே உண்மையான சமூகநீதி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகப் பகுதியில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் பழங்குடிகள் மற்றும் பாரம்பரியமாக வனம் சார்ந்து வாழும் மக்களைப் புலிகள் பாதுகாப்பு என்ற பெயரில் ஒரே அடியாக வெளியேற்றும் வகையில் சுப்ரீம் கோர்ட்டின் இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவு ஆழ்ந்த கவலைக்குரியது. மே 29, 2026 தீர்ப்பில், மேகமலைப் பகுதியில் 4,601 ஆக்கிரமிப்புகள் 5,072.653 ஹெக்டேர் பரப்பில் இருப்பதாக நீதிமன்றப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் 1,595 பேருக்கு நிரந்தர வீடும், காட்டைச் சார்ந்த வாழ்வாதாரமும்; 233 பேருக்கு தற்காலிக வீடும், காட்டைச் சார்ந்த வாழ்வாதாரமும்; 2,773 பேர் காட்டில் விவசாயத்தை மட்டுமே சார்ந்தவர்களுமாக தமிழ்நாடு அரசு வகைப்படுத்தியுள்ளது. இவர்கள் வெறும் ‘ஆக்கிரமிப்பாளர்கள்’ அல்ல; வறுமையிலும் வாழ்வாதாரப் பாதுகாப்பின்றியும் காடுகளைச் சார்ந்து வாழும் மக்கள் ஆவர். பல பத்தாண்டுகளாக, தலைமுறை தலைமுறைகளாக காடுகளில் வாழும் மக்கள் ஆவர். வன உரிமைகள் சட்டம், 2006 வழங்கியுள்ள உரிமைகள் முழுமையாகக் கண்டறியப்பட்டு, சரிபார்க்கப்பட்டு, அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பாக மக்களை வெளியேற்றுவது சட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே புறக்கணிப்பதாகும். குறிப்பாக உரிமைகள் அங்கீகரிப்பு மற்றும் சரிபார்ப்பு நடைமுறை முடிவடையும் முன் பழங்குடிகள் மற்றும் பாரம்பரியமாக வனம் சார்ந்து வாழும் மக்களை வெளியேற்றுவதற்கு எதிரான முக்கியமான பாதுகாப்பை வழங்குகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பும் பழங்குடிகள் மற்றும் பாரம்பரியமாக வனம் சார்ந்து வாழும் மக்களின் உரிமைகளும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. காட்டைப் பாதுகாக்க வேண்டும்; ஆனால் காட்டைப் பாதுகாக்கும் பெயரில் காட்டோடு வாழ்ந்த மக்களை அழித்தொழிக்கக் கூடாது. பெரிய அளவிலான அரசு மற்றும் அதிகார வர்க்க ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக ஏழை வனவாழ் மக்களையே முதன்மை குற்றவாளிகளாக நடத்துவது சமூகநீதிக்கு எதிரானது. நீதிமன்றப் பதிவுகளிலேயே அரசு அதிகாரிகளின் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சமீபத்திய அணுகுமுறை தமிழ்நாடு அரசுக்கு ஒரு முக்கிய முன்னுதாரணமாகும். அங்கு 2026 ஜூலை 30-ம் தேதி பழங்குடியினர் விவகாரத்துறை, உரிமைகள் பெறும் பழங்குடிகள் மற்றும் பாரம்பரியமாக வனம் சார்ந்து வாழும் மக்களை பழங்குடியினர் மற்றும் பாரம்பரிய வனவாழ் மக்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு சரிபார்க்கப்படும் வரை அவர்களை வெளியேற்றக் கூடாது என்றும், மாவட்ட நிர்வாகங்கள் மூன்று அடுக்கு சட்ட நடைமுறையை விரைவுபடுத்த வேண்டும் என்றும், ஜம்மு-காஷ்மீர் அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டின் இத்தீர்ப்பை ஏற்றுக்கொண்டு அவகாசம் கேட்பது பழங்குடிகள் மற்றும் பாரம்பரியமாக வனம் சார்ந்து வாழும் மக்களை உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற அரசின் கடமையிலிருந்து தவறும் செயலாகும். தமிழ்நாடு அரசு உடனடியாக சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு, அனைத்து தனிநபர் மற்றும் சமூக உரிமைகளையும் முதலில் முழுமையாகக் கண்டறிந்து அங்கீகரிக்க வேண்டும். அதுவரை கட்டாய வெளியேற்றத்தை நிறுத்த வேண்டும். பழங்குடிகள் மற்றும் பாரம்பரியமாக வனம் சார்ந்து வாழும் மக்களின் வாழ்வுரிமை, வாழ்வாதார உரிமை மற்றும் சட்டப்பூர்வ வன உரிமைகளைப் பாதுகாப்பதே உண்மையான சமூகநீதியும் சுற்றுச்சூழல் நீதியும் ஆகும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/protecting-livelihood-rights-of-forest-dwelling-people-is-true-social-justice-mu-veerapandian



