ஜகார்த்தா, எரிமலை சாம்பலால் ஆயிரக்கணக்கான விமானங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், இந்தோனேசிய விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 2, 300 விமானங்கள் ரத்து இந்தோனேசியாவில் உள்ள அனக் கிரகடாவ் எரிமலை வெடித்ததால், அந்த பகுதியில் வளிமண்டலத்தில் எரிமலை சாம்பல் படர்ந்துள்ளது. இதனால் ஜகார்த்தா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் 8 விமான நிலையங்கள் மூடப்பட்டன. இதன் காரணமாக மேலும் சுமார் 2 ஆயிரத்து 300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, 22 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜகார்த்தா, மேற்கு ஜாவா, பான்டென் மற்றும் லம்புங் மாகாணங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகின்றன. எரிமலை வெடிப்பு தற்போது குறைந்தாலும், மீண்டும் வெடிக்க வாய்ப்புள்ளதாக புவியியல் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மீண்டும் திறப்பு இந்நிலையில் எரிமலையிலிருந்து வெளியேறிய சாம்பல் காரணமாக மூடப்பட்டிருந்த ஜகார்த்தாவில் உள்ள முக்கிய விமான நிலையம் மற்றும் பிற நான்கு விமான நிலையங்களை இந்தோனேசியா மீண்டும் திறந்துள்ளது. முக்கியமான உள்கட்டமைப்பு வசதிகளிலிருந்து எரிமலை சாம்பலை அதிகாரிகள் அகற்றியதைத் தொடர்ந்து, இன்று இந்த ஐந்து விமான நிலையங்களும் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தன. ஜகார்த்தாவில் உள்ள சோகார்னோ-ஹட்டா (Soekarno-Hatta) சர்வதேச விமான நிலையம் சமூக ஊடகங்களில் பகிர்ந்த காணொளிகளில், தீயணைப்பு வீரர்களும் வாகனங்களும் சாம்பல் படிந்திருந்த ஓடுபாதைகள் மற்றும் பிற செயல்பாட்டுப் பகுதிகளைச் சுத்தம் செய்வது இடம்பெற்றிருந்தது. விமானச் சேவைகள் இயல்பு நிலைக்குத் திரும்ப "சிறிது" கூடுதல் நேரம் ஆகலாம் என்றும், விமானங்கள் பறப்பதற்கு ஏற்ற நிலையில் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்த நாங்கள் சோதனைகளை மேற்கொள்ளவிருப்பதால், பயணிகள் மற்றும் பொதுமக்கள் சிறிது பொறுமை காக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றும் அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் டுடி புர்வாகந்தி (Dudy Purwagandhi) தெரிவித்துள்ளார். நெருப்பு வளைய பகுதி பசிபிக் பெருங்கடலின் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியாவில் 120-க்கும் மேற்பட்ட செயல்படும் எரிமலைகள் உள்ளன. எனவே, மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 2018-ல் ஏற்பட்ட ஒரு வெடிப்பின் போது எரிமலையின் பள்ளம் (crater) பகுதியளவு இடிந்து விழுந்தது; இது ஜாவா மற்றும் சுமத்ரா கடற்கரைப் பகுதிகளில் சுனாமியை ஏற்படுத்தி, 400-க்கும் மேற்பட்டோரின் உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/world/indonesia-airports-reopen-after-volcanic-ash-disrupts-thousands-of-flights




